கண்மாயில் விஷம்; மீன்கள் இறப்பு

கண்மாயில் விஷம்; மீன்கள் இறப்பு

ராஜபாளையம் அருகே கண்மாயில் விஷம் கலக்கப்பட்டதால், மீன்கள் இறந்து மிதக்கின்றன.  

ராஜபாளையம் அருகே கண்மாயில் விஷம் கலக்கப்பட்டதால், மீன்கள் இறந்து மிதக்கின்றன.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தர ராஜபுரத்தை சேர்ந்தவர் பொன் இருளப்பன். இவர் அருகே உள்ள கணபதி சுந்தர நாச்சியார்புரத்தில் அமைந்துள்ள கொசவன் குளம் கண்மாயை 5 ஆண்டுகளுக்கு மீன்பாசி ஏலம் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு ரூ. 1.25 லட்சம் கட்டி மீன்களை வளர்த்து விற்பனை செய்துள்ளார்.

இந்த ஆண்டு அரசுக்கு சுமார் ரூ. ஒன்றரை லட்சம் பணம் கட்டி, கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக ரூ. 70 ஆயிரம் மதிப்பில் சிசி மற்றும் மண்டை கட்லாக் மீன் குஞ்சுகளை வாங்கி கண்மாய்க்குள் விட்டுள்ளார். ஒரு கிலோ வரை வளர்ச்சி காணும் இந்த வகை மீன்கள் தற்போது சுமார் 400 கிராம் வரை வளர்ந்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை கண்மாய்க்கு சென்று பார்த்த போது, மீன்கள் அனைத்தும் செத்து மிதப்பதை பார்த்து பொன் இருளப்பன் அதிர்ச்சி அடைந்தார். மேலும் மீன்களுக்கு உணவாகும் சிறிய கூனி வகை இரால் குஞ்சுகளும் கரையோரம் செத்து மிதப்பதை கண்ட அவர் கண்மாயில் விஷம் கலக்கப்பட்டதை உறுதி செய்தார். ஏனெனில் கண்மாயில் தண்ணீர் குறைந்துள்ளதால் இரண்டு கிடங்குகள் உள்ளது. தற்போது ஒரு கிடங்கில் உள்ள மீன்கள் மட்டும் செத்து மிதக்கிறது.

அருகே உள்ள கிடங்கில் உள்ள மீன்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. இதனால் முன் விரோதம் காரணமாக அடையாளம் தெரியாத நபர், விஷம் கலந்துள்ளதாக சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கண்மாயில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் தற்போது அப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மீன்கள் அனைத்தும் செத்து விட்டதால் தனக்கு ரூ. 50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறும் பொன் இருளப்பன், கண்மாயில் விஷம் கலந்த குற்றவாளியை கைது செய்வதுடன், தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story