அருமனை அருகே மாயமான பெண் மர்ம சாவு

அருமனை அருகே மாயமான பெண் மர்ம சாவு
பெண் மர்ம மரணம் 
கன்னியாகுமரி மாவட்டம்,அருமனை அருகே பெண் மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே பாக்கியபுரம் பகுதியை சேர்ந்தவர் மிக்கேல் ஞானம்மாள் (58). இவரது கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மிக்கேல் ஞானம்மாள் ராஜாவூரில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தையை பார்த்து வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார்.

ஆனால் அவர் ராஜாவூருக்கு தந்தையை பார்க்க செல்லவில்லை. வீடும் திரும்பவில்லை. இதற்கிடையில் புதன்கிழமை பழவூர் பகுதியில் விபத்தில் சிக்கிய பெண் ஒருவரை படுகாயத்துடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்ததாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து மிக்கேல் ஞானம்மாள் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிய வந்தது.

மருத்துவமனையில் சென்று பார்த்த போது படுகாயம் அடைந்ததவர் மிக்கேல் ஞானம்மாள் என்பது உறுதியானது. இதை அடுத்து அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மிக்கேல் ஞானம்மாள் உயிரிழந்தார்.

ஞாயிற்றுக்கிழமை முதல் புதன் கிழமை வரை அவர் தொடர்பாக எந்த தகவலும் இல்லாத நிலையில், படுகாயத்துடன் அவரை மீட்டது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் விபத்தில் சிக்கினாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து பழவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story