கல்லூரிகளில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்

கோவையிலுள்ள கல்லூரிகளில் பொங்கல் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது.

கோவை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வெகு விமர்சையாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் வேஷ்டி சட்டை என பாரம்பரிய உடைகளை அணிந்து கலந்து கொண்டனர்.புடவை அணிந்து வந்த மாணவியர் நடனமாடி,மண் பானையில் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என்று உற்சாகமாக கொண்டாடினர்.

மாணவிகள் வண்ண கோல‌மிட்டு,கும்மியாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் உற்சாகத்துடன் கலந்துக்கொண்டு கொண்டாடப்பட்டது. தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக உறியடித்தல்,கரகாட்டம், மயிலாட்டம்,ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.இந்த நிகழ்வில் திமுக முன்னாள் அமைச்சரும் கல்லூரியின் நிறுவனருமான பொங்கலூர் பழனிச்சாமி, கல்லூரி துணைத் தலைவர் இந்து முருகேசன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதே போல நீலாம்பூர் பகுதியில் உள்ள கதிர் பொறியியல் கல்லூரி மற்றும் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள கே.பி.ஆர் கல்லூரியில் பொங்கல் விழா பாரம்பரிய முறைப்படி உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

Tags

Next Story