விசைத்தறி உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை

விசைத்தறி உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை

தற்கொலை

மனைவி தாலியை விற்ற பணமும் ஆன்லைன் சூதாட்டத்தில் போனதால் விரக்தி
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, சின்னமணலி பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து (வயது 42). வீட்டில் விசைத்தறி அமைத்து தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கிய நிலையில் உயிருக்கு போராடினார். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அங்கமுத்து பரிதாபமாக இறந்தார். அங்கமுத்து தற்கொலை தொடர்பாக எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:- அங்கமுத்து கடந்த 6 மாதங்களாக ஆன்லைனில் சூதாடி வந்துள்ளார். இதற்காக பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கி உள்ளார். மேலும் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த அவர், கடைசி முயற்சியாக மனைவியின் தாலியை விற்று அந்த பணத்தை கொண்டு ஆன்லைனில் சூதாடி உள்ளார். அந்த பணத்தையும் சூதாட்டத்தில் இழந்து உள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக மிகுந்த மனஉளைச்சலில் அங்கமுத்து இருந்துள்ளார். கடன் ெகாடுத்த நபர்கள் அவருக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினர். ஒரு கட்டத்தில் இனி நாம் வாழ்வதை விட சாவது மேல் என நினைத்து வீட்டில் விஷம் குடித்து உயிரை மாய்த்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மனைவியின் தாலியை விற்று ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எடப்பாடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story