வெப்ப அலைத் தாக்கத்திருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்

வெப்ப அலைத் தாக்கத்திருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்

வெப்ப அலைத் தாக்கத்திருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


வெப்ப அலைத் தாக்கத்திருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெப்ப அலைத் தாக்கத்திருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது, இயல்பான வெப்ப அலையைக் காட்டிலும் கூடுதலாக வெப்ப அலையின் தாக்கம் 37 முதல் 39◦C இருக்கக்கூடும் என இந்திய வானியல் ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள கீழ்க்கண்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றிடுமாறும் மேலும் இயற்கை இடர்பாடுகள் தொடர்பாக 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். வெப்ப அலையின் தாக்கத்தின் பாதிப்புகளைக் குறைத்தல் வெயிலில் செல்வதை தவிர்த்திட வேண்டும். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திட வேண்டும். தாகம் இல்லாவிட்டாலும் போதுமான இடைவெளியில் அடிக்கடி குடிநீர் பருகிட வேண்டும். தவிர்க்க இயலாத சூழ்நிலையில் வீட்டை விட்டு வெளியில் செல்லும் நேர்வில் மெல்லிய, வெளிர்நிற, தளர்வான மற்றும் நுண்ணிய பருத்தி ஆடைகளை அணிந்து செல்லவும், கண்ணாடி, குடை, தொப்பி, மற்றும் காலணி ஆகியவற்றை அணிந்து செல்லவேண்டும். மேலும், வெப்பத்தாக்கம் அதிகமாக இருக்கும் போது கடினமான பணிகளை தவிர்த்திடவும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்தவெளியில் பணி புரிவதை தவிர்த்திட வேண்டும். பயணத்தின்போது தேவையான அளவு குடிநீர் எடுத்துச் செல்லவேண்டும். திறந்தவெளியில் பணிபுரியும்போது தொப்பி அல்லது குடையைப் பயன்படுத்த வேண்டும். மேலும் தலை, கழுத்து, முகம், கை மற்றும் கால்களில் ஈரத் துணியைப் பயன்படுத்தி வெப்பத்தாக்கத்தை குறைத்துக் கொள்ளவேண்டும். நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை உள்ளே இருக்க வைத்து விட்டு செல்லக்கூடாது. மயக்கமோ அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறவேண்டும் ஓஆர்எஸ் எனப்படும் உப்புச்சர்க்கரை கரைசல், வீட்டில் தயாரித்த நீர்மோர், லெஸ்சி, சாதநீர், எலுமிச்சை நீர் போன்ற பானங்களைப் பருகி நீர்ச்சத்து இழப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நிழல் தரும் கூரைகள் உள்ள இடங்களில் கால்நடைகளை இருக்குமாறும், அவற்றுக்கு போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். வீட்டை குளுமையாக வைத்திருக்க திரைச்சீலைகள், ஷட்டர்கள் அல்லது சன்ஷேட் மற்றும் ஜன்னல்கள் ஆகியவற்றை இரவில் திறந்து வைத்திருக்க வேண்டும். மின்விசிறி பயன்படுத்தியும், ஈரமான ஆடைகள் மற்றும் குளிர்ந்த நீரில் அடிக்கடி குளித்தும் உடல் வெப்பத்தை குறைத்திட வேண்டும். வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சையளிப்பதற்கான உதவிக்குறிப்புகள் வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட ஒருவரை நிழலின் கீழ் குளிர்ந்த இடத்தில் அமர வைத்து, ஈரமான துணியால் துடைக்கவோ அல்லது உடலை அடிக்கடி கழுவிடவேண்டும். சாதாரண வெப்பநிலை தண்ணீரை தலையில் ஊற்றி உடல் வெப்பநிலையை குறைத்திட வேண்டும். வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட நபர் ORS (Oral Rehydration Solution) எனப்படும் உப்புச்சர்க்கரை கரைசல், எலுமிச்சை சர்பத், சாதநீர் பருகி நீர்ச்சத்து இழப்பிலிருந்து தங்களது உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு அழைத்துச்செல்ல வேண்டும். ஏனெனில் வெப்பத்தாக்கத்தால் ஏற்படும் பக்கவாதம் மிகவும் ஆபத்தானது. சுற்றுப்புறச்சூழலுக்கு உடலை பழக்கப்படுத்துதல் குளிர் நிலையிலிருந்து வெப்ப அலைக்கு வருபவர்களுக்கு திடீரென ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால், அத்தகைய நபர்கள் தங்களது உடலை வெப்ப அலைக்கு பழகும் வரை ஒரு வாரத்திற்கு திறந்தவெளியில் நடமாடக் கூடாது மற்றும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும், வெப்ப அலைக்கு பழகிய பின்னரே வெளியில் வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. நூறுநாள் வேலைத் திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் இத்திட்டத்தின்கீழ் பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு பணித்தளத்தில் சுகாதாரத்துறை மூலம் ஓஆர்எஸ் பொடி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஓஆர்எஸ் பொட்டலங்கள் அருகிலுள்ள அங்கன்வாடி மையம், துணை சுகாதார நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைக்கும். இது தொடர்பாக கூடுதல் தகவல்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்.104-ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story