கோவையில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம்!

கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

கோவை:விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,அத்யாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்க வேண்டும், விவசாயிகளுக்கான உரம், பூச்சி மருந்து,மின்சார கட்டணத்திற்கு சலுகைகள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக இன்று திரண்ட எல்.பி.எப், ஐ.என்.டி.யு.சி,ஏ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டி.யு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.

கடந்த பல நாட்களாக டெல்லியில் போராடிவரும் விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக மத்திய அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என வலியுறுத்தினர்.அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், கல்வி,சுகாதார மருத்துவம் ஆகியவற்றின் கவனம் செலுத்தாத மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

அனுமதி இன்றி போராட்டம் நடத்திய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.உழைக்கும் தொழிலாளர்கள் விரோத போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் தொழிலாளர் விரோத சட்டங்களை மத்திய அரசு கைவிடும் வரை நாடு முழுவதும் போராட்டங்கள் தொடரும் என சிஐடியு செயலாளர் ஆறுமுகம் தெரிவித்தார்.

Tags

Next Story