நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் - இந்திய மாணவர் சங்கத்தினர் கைது

தஞ்சையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கலால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

முறைகேடுகளின் மொத்த வடிவமாக உள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சாவூரில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அர்ஜுன் தலைமை வகித்தார். பாலாஜி நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டுச் சென்ற இந்திய மாணவர் சங்கத்தினர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள மத்திய கலால் அலுவலகத்தை சென்றடைந்தனர்.

கலால் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது நீட் தேர்வை கண்டித்தும், ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அர்ஜுன், மாவட்டச் செயலர் சந்துரு, மாவட்ட துணைச் செயலாளர் பிரிதீஷ், மாவட்ட துணைத் தலைவர் பிரேம் உள்ளிட்ட 25 பேரை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

Tags

Next Story