ராமநாதபுரம் முதலமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
தபால் அனுப்பும் போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருவில் நடந்து செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கிறது. இதனால் ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றன. இது குறித்து கீழக்கரை நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் தெருக்களில் நிம்மதியாக நடக்க முடியாத சூழல் நிலவி வருவதால் தெரு நாய் தொல்லையிலிருந்து தங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதும் போராட்டம் இன்று நடைபெற்றது.
கீழக்கரையில் அனைத்து சமுதாய மக்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 3000 அஞ்சல் அட்டைகளை தபால் நிலையத்தில் முதலமைச்சருக்கு அனுப்பி வைத்தனர்.
முதலமைச்சருக்கு 3000 கடிதங்கள் எழுதிய பிறகாவது தெரு நாய்களின் நடமாட்டத்தை குறைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கீழக்கரை அனைத்து சமுதாய பொது மக்கள் கேட்டுக்கொண்டனர்.