நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தஞ்சாவூர் அருகே நடந்த மக்கள் நேர்காணல் முகாமில்,  பயனாளி ஒருவருக்கு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. 
தஞ்சாவூர் அருகே நடந்த மக்கள் நேர்காணல் முகாமில், ரூ.5.10 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தஞ்சாவூர் வட்டம், பெரம்பூர் சரகம், வண்ணாரப்பேட்டை முதன்மை கிராமத்தில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் , மக்கள் நேர்காணல் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறையின் சார்பில், திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை பார்வையிட்டனர்.

இம்முகாமில், வருவாய்த் துறையின் சார்பில், 18 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையினையும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அனைத்து வித விவசாயப் பயன்பாட்டுப் பொருள்கள் 5 பயனாளிகளுக்கு ரூ.5,10,680 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் ரூ.33,250 மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு தொழில்முனைவோர் திட்டத்தின் மூலம் ரூ.6,690 மதிப்பிலான காசோலையும், பொது சுகாதாரத்துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடியும், 5 பயனாளிகளுக்கு கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டத்சத்து பெட்டகம் என மொத்தம் 45 பயனாளிகளுக்கு ரூ.5,50,620 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் வழங்கி தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பேசினார்.

இந்நிகழ்ச்சியில், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ் அவர்கள், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, வட்டாட்சியர் ப.அருள்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் கே.ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story