தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி

விபத்து ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் சென்ற பேருந்தை சிறைப்பிடித்த பொதுமக்கள்

புதுக்கோட்டை அருகே அதிவேகத்தில் சென்ற தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே முக்கூட்டுகொள்ளை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் திருவரங்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பயணிகளை ஏற்றுவதற்காக அதிவேகத்தில் ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு நோக்கி சென்ற தனியார் பேருந்து திடீரென இருசக்கர வாகனத்தில் மோதியதில் மாணிக்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த நிலையில் தனியார் பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தாமல் அதிவேகத்தில் எடுத்துச் சென்றதால் தோப்பு கொள்ளை என்ற இடத்தில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில் இந்த தனியார் பேருந்து ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதுபோல் தனியார் பேருந்துகள் அதிவேகமாக இந்த பகுதியில் செல்வதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், இந்த விபத்து நடந்து நீண்ட நேரத்திற்கு பிறகு வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் இறந்து விட்டார் என்ற தகவலை கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர் எனவும், போலீசார் நீண்ட நேரமாக வரவில்லை என்றும் கூறினர்.

அதன் பிறகு தகவல் அறிந்த போலீசார் நீண்ட நேரத்திற்கு மேலாக பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இறந்த மாணிக்கம் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சாலை மறியலால் புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story