ராமநாதபுரம் : புதிதாக பணியில் சேர்ந்த ஊர்காவல் படையினருக்கு பாராட்டு

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக பணியில் சேர்ந்த ஊர்காவல் படையினருக்கு பதக்கங்கள் வழங்கிய மாவட்ட எஸ்பி சந்தீஷ் பின்னர் அவர்களுடன் உணவு அருந்தினார்.

தமிழகத்தில் காவல்துறைக்கு அடுத்தபடியாக ஊர்க்காவல் படையினர் சிறந்த பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக தேர்தல் பணி, கோவில்களில் பாதுகாப்பு பணி, இரவு ரோந்து பணி, முக்கிய தலைவர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணி உள்ளிட்ட பணிகளை சிறந்து செயலாற்றி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு 687 பேர் விண்ணப்பித்து 17.02.2024 அன்று நேர்காணல் நடைபெற்றது.

அதில் 86 ஆண்கள், 12 பெண்கள், 10 பேர் என மொத்தம் 108 பேர் கடலோர காவல்படை குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான 45 நாட்கள் அடிப்படைப் பயிற்சி 20.03.2024 அன்று தொடங்கப்பட்டு PT, Squad drill, platoon drill, Company drill, Fire Service Class போன்ற பயிற்சிகள் ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பான முறையில் அளிக்கப்பட்டு தகுதியான 97 பேர் பயிற்சியை நிறைவு செய்தனர். பயிற்சியை முடித்தவர்கள் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் முன்னிலையில் சிறப்பான மற்றும் மிடுக்கான அணி வகுப்பினை செய்து காண்பித்தனர்.

பின்னர் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் எவ்வாறு பணி செய்ய வேண்டும் பணியில் எவ்வளவு பொறுமை மற்றும் கடமையாக பணியாற்ற வேண்டும் என சிறப்புரையாற்றினார். அவர்களை கௌரவிக்கும் வகையில் அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் புதிதாக பயிற்சியை முடித்த அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் அவர்கள் உணவு பரிமாறி அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தார்.

Tags

Next Story