ராமநாதபுரம் பரமக்குடி ஸ்ரீ முத்தையா கோவில் மகா கும்பாபிஷேகம் விழா

ராமநாதபுரம் பரமக்குடி நகர் பகுதியில் உள்ள கிராமத்தில் ஸ்ரீ முத்தையா கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ராமநாதபுரம் பரமக்குடியின் ஆதி கிராமமான காட்டுப் பரமக்குடி கிராமத்தினருக்கு பாத்தியப்பட்ட 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஸ்ரீ முத்தையா சுவாமி கோயில். காட்டுபரமக்குடி மக்களின் காவல் தெய்வமாகவும், பரமக்குடி மக்களின் எல்லை தெய்வமாகவும் வணங்கி வருகின்றனர்.இந்த கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

கடந்த 30ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்ய ஹோமம், புன் யாகவாசனம் மற்றும் கணபதி யாகத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து இரண்டாம் நாள் பூர்வாங்க பூஜை, வாஸ்து சாந்தி பூஜையுடன், ஸ்ரீ முத்தையா சாமிக்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு சிலைகள் விக்கிரக பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, நான்காம் நாள் கால யாகசாலை பூஜை, கோ பூஜையுடன் சிவாச்சாரியார்கள் மற்றும் கிராம மக்கள் புனித நீர் கும்பத்துடன் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்தனர். இதனை தொடர்ந்து கொடுமலூர் கோவில் சிவாச்சாரியார் நவநீதன் தலைமையில் ஸ்ரீ முத்தையா சுவாமி கோயில் கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பரிவார தெய்வங்களான கணபதி, முருகன் ,மதலை கருப்பண்ணசாமி, இருளாகி மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவகிரகத்துக்கு புனித நீர் ஊத்தப்பட்டு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றது. 5 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை காட்டுப்பரமக்குடி கிராம பொதுமக்கள், விழா கமிட்டியினர், மகளிர் மன்றத்தினர் மற்றும் முத்தையா கபாடி குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story