குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு - அதிர்ச்சியில் உறவினர்கள்!

அறுவை சிகிச்சைக்கு அனுமதித்த பெண் உயிரிழந்ததால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

ராமநாதபுரம் அருகே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவிலை அடுத்த மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். கட்டிட கூலி தொழிலாளியான இவருக்கு கீதா என்ற மனைவியும் இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமான கீதா கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக நைனார்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று காலை கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள சென்ற கீதா உயிருக்கு ஆபத்தான நிலையில், ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இருப்பதாக திடீரென செவிலியர்கள் கீதாவின் உறவினர்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு அரசு மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது கீதா உயிரிழந்து விட்டதாக மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து கீதா நயினார் கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறான சிகிச்சியால் உயிரிழந்ததாக கூறி உடலை வாங்க உறவினர்கள் மறுத்து கடமையான போராட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பதட்டமான சூழல் நிலவியது. இதனை அடுத்து அங்கு வந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் பரமக்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் போராட்டம் நடத்திய பெண்ணின் உறவினர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட அவர்கள் உடலை வாங்க சம்மதித்து அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story