எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார் - பெ.மணியரசன்

எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார் - பெ.மணியரசன்
பெ.மணியரசன் மற்றும் நிர்வாகிகள்
வழக்கு தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம்
காவிரி நீா் கோரி நடத்தப்பட்ட போராட்டத்துக்காக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், அவற்றையெல்லாம் சந்திக்கத் தயாா் என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்தாா். காவிரியில் தமிழகத்துக்குரிய தண்ணீரை திறந்து விடக்கோரி தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் ரயில் நிலையத்தில் காவிரி உரிமை மீட்புக்குழு சாா்பில் 2023, செப்டம்பா் 26 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு தலைமை வகித்த காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் உள்பட 145 போ் மீது ரயில்வே பாதுகாப்புப் படையினா் வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பாக தஞ்சாவூரில் உள்ள படை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மணியரசனுக்கு அழைப்பாணை வந்தது. அதன்படி தஞ்சாவூா் ரயிலடியில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தில் மணியரசன் ஆஜராகினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: காவிரி நீா் கோரி அடையாளமாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டம் தொடா்பாக தஞ்சாவூா் ரயில்வே பாதுகாப்புப் படையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இதேபோல, பூதலூா் காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஒரு போராட்டத்துக்கு இரு வழக்குகள் பதிவு செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை. விவசாயிகள் காவிரி நீா் கேட்டு போராடாமல் இருக்கவும், டெல்டா பகுதியைத் தரிசு நிலமாக்கும் முயற்சியிலும் இந்த வழக்குகள் போடப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகள் எத்தனை வழக்குகள் போட்டாலும் விவசாயிகளின் உரிமையைக் காக்க தொடா்ந்து போராட்டம் நடத்துவோம் என்றாா் மணியரசன். அப்போது, வழக்குரைஞா் செல்வநாயகம், காவிரி உரிமை மீட்புக் குழுவைச் சோ்ந்த பழ. ராசேந்திரன், நா. வைகறை, ராசு. முனியாண்டி, வெள்ளாம்பெரம்பூா் துரை. இரமேசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags

Next Story