சீரமைக்கப்பட்ட பொன்மலை ரயில்வே மேம்பாலம் போக்குவரத்திற்கு திறப்பு !

சீரமைக்கப்பட்ட பொன்மலை ரயில்வே மேம்பாலம் போக்குவரத்திற்கு திறப்பு !
மேம்பாலம் திறப்பு
சீரமைக்கப்பட்ட பொன்மலை ரயில்வே மேம்பாலம் போக்குவரத்து பயன்பாட்டிற்காக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பொன்மலை ஜி- கார்னர் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் பகுதி கடந்த ஜனவரி மாதம் 12- ஆம் தேதி சேதமடைந்தது. இதையடுத்து அந்த பகுதியை நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதில் மற்றொரு பாலத்தின் வழியாக தஞ்சை நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற ஊர்களுக்கும், துவாக்குடி, திருவெறும்பூர் போன்ற ஊர்களுக்கும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 2 மாதங்களுக்கு மேலாக நெடுஞ்சாலைதுறையினரால் மேற்கொள்ளப் பட்ட பாலத்தை சீரமைக்கும் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் அழகுசுந்தரம் மூர்த்தி தலைமையில் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த பாலத்தின் உறுதித்தன்மையை சோதனை செய்ததில் பாலத்தின் கீழ்பகுதியில் ஒரு சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் மேல்பகுதியில் 30 டன் எடைக் கொண்ட ஒரு லாரியை இரவு முழுவதும் நிறுத்தி வைத்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு முடிவில் பாலத்தின் உறுதித்தன்மை நிரூபிக்கப்பட்டால் போக்குவரத்து தொடங்கும் என சென்னை ஐ.ஐ.டி. நிபுணர் குழுவினர் தெரிவித்தனர். சுமார் 60 நாட்களாக மேம்பாலத்தில் சீரமைப்பு பணி நடைபெற்று முடிவடைந்த நிலையில் இன்று காலை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் போக்குவரத்து பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகர காவல் கண்காணிப்பாளர் காமினி, மேயர் மு.அன்பழகன், மண்டலத் தலைவர் மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story