மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவேந்தல்

மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவேந்தல்
தஞ்சாவூரில் நினைவேந்தல் நிகழ்ச்சி
தஞ்சாவூர், கும்பகோணத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகளின் 59-ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி. இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் 1965-ம் ஆண்டில் கட்டாய இந்தி மொழி திணிப்புக்கு எதிராக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டத்தில் கீழப்பழுவூர் சின்னச்சாமி, மயிலாடுதுறை சாரங்கபாணி, மாணவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உயிர்நீத்தனர். தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரம் பேர் கைது செய்யப் பட்டனர்.

பிறகு இந்தி மொழி திணிப்பு கைவிடப்பட்டது. இதையடுத்து, உயிர்நீத்த மொழிப் போர் தியாகிகள் நினைவு தினம் ஆண்டுதோறும் ஜன.25-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகளின் நினை வேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்கள் விடுதலை மாவட்டச்செயலாளர் இரா.அருணாச்சலம் தலைமை வகித்தார். மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி என்.குருசாமி, மக்கள்கலை இலக்கியக் கழக இணைச் செயலாளர் ராவணன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் அ.ரெ.முகி லன் ஆகியோர் உரையாற்றினர். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கி ணைப்பாளர் துரை.மதிவாணன் நன்றி கூறினார். தாய்மொழி தமிழை பாதுகாப்போம். பண்பாடு, கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிப்போம் என உறுதி மொழியேற்றனர்.

கும்பகோணத்தில்... கும்பகோணம் திமுக மாநகர அலுவலகத்தில், மாணவரணி சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் உருவப் படத்துக்கு மாநிலங்களவை உறுப்பினரும், தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளருமான எஸ்.கல்யாணசுந்தரம், எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். துணை மேயர் சு.ப.தமிழழகன், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் க.செந்தில்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதேபோல, சாக்கோட்டையில் வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்துக்கு எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

Tags

Next Story