மின் கம்பத்தில் பழுது: மின்சாரம் தாக்கி உதவியாளர் பலி!

மின் கம்பத்தில் பழுது: மின்சாரம் தாக்கி உதவியாளர் பலி!

 அய்யப்பன்

காவேரிப்பாக்கம் அருகே மின்கம்பத்தில் பழுது சரிசெய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உதவியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிபேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த கடப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் நிர்மல்குமார் என்கிற அய்யப்பன் (38). இவரது தாய்மாமா கோபால் என்கிற கோவர்தன் (48) காவேரிப்பாக்கம் மின்வாரியத்தில் ஒயர் மேனாக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக கோவர்தன் தனது அக்கா மகனான அய்யப்பனை உதவிக்காக அழைத்து சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவர்தன் மற்றும் அய்யப்பன் ஆகிய இருவரும், காவேரிப்பாக்கம் அடுத்த வேகாமங்கலம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த மின்கம்பத்தில் மின் பழுதை சரிசெய்து கொண்டிருந்தனர்.அப்போது மின்கம்பத்தின் மேல் பகுதியில் இருந்த அய்யப்பன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே கீழே ஏணியை பிடித்துக்கொண்டிருந்த அவருடைய தாய்மாமா கோவர்தன் அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சென்று மயக்க நிலையில் இருந்தவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அய்யப்பனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுதொடர்பாக காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story