ஆற்று பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை!

ஆற்று பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை!

தடுப்பு சுவர் 

நெமிலியில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் சாலையின் குறுக்கே கொசஸ்தலை ஆறு பகுதியில் ஆற்றுப்பாலத்தில் தடுப்பு சுவர் மற்றும் மின்விளக்கு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரக்கோணம் நெமிலியில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் சாலையின் குறுக்கே கொசஸ்தலை ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. நெமிலியில் இருந்து காஞ்சீபுரம், அரக்கோணம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பள்ளி, கல்லூரி, வேலை, மருத்துவமனை உள்ளிட்ட பணிகளுக்காக இந்த பாலத்தின் வழியாக சென்றுவருகின்றனர்.

இந்த பாலத்தின் ஓரத்தில் தடுப்பு சுவர் இல்லாத நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி ஆற்றில் விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மின் விளக்கும் இல்லாததால் இரவு நேரங்களில் இந்த வழியாக வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தவறிவிழும் நிலை ஏற்படுகிறது. மின் விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் இந்தப்பகுதியில் பெண்களிடம் சில நேரங்களில் வழிப்பறி சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இதனால் இந்த பாலத்தை அப்புறப்படுத்தி உயர்மட்ட மேம்பாலம் அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்துவருகின்றனர். புதிய மேம்பாலம் அமைக்கும் வரை விபத்துகளை தடுக்கும் வண்ணம் தடுப்பு சுவர், மின் விளக்குகளை அமைக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story