கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏ.டி.எம்., மையம் அமையுமா?

கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏ.டி.எம்., மையம் அமையுமா?

ஆட்சியர் அலுவலகம்

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்., மையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், மகளிர் காவல் நிலையம், போலீஸ் பயிற்சி பள்ளி, பொதுப்பணித்துறை, கனிமவளத் துறை என, பல்வேறு அரசு அலுவலங்களும், போலீசார் குடியிருப்புகளும் இயங்கி வருகின்றன.

இங்குள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாத ஊதியம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் செலுத்தப்படுகிறது. ஆனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அல்லது தனியார் வங்கி என, எந்தவொரு ஏ.டி.எம்., மையமும் அமைக்கப்படவில்லை. இதனால், அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, பல்வேறு தேவைகளுக்காக காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்லும் பொதுமக்கள், பிற இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கலெக்டர் அலுவலக வளாகத்தில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்., மையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஏ.டி.எம்., மையம் அமைக்காததது அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் ஏமாற்றத்தை தருகிறது.

எனவே, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்., மையம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.

Tags

Next Story