மரக்கன்றுகளை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சௌதாபுரம் ஊராட்சி பகுதியில் வளர்க்கப்பட்டு வந்த மரக்கன்றுகளை வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் சௌதாபுரம் ஊராட்சியில், மேட்டுக்காடு என்ற இடத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் சுமார் 3 வருடங்களுக்கு முன்பு 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பல்வேறு வகையான செடிகள் ஆகியவை நடப்பட்டது . தொடர்ந்து இந்த செடிகள் முழுமையாக பராமரிக்கப்பட்ட வந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் மற்றும் ஓரளவு வளர்ந்த நிலையில் இருந்த மரக்கிளைகள் ஆகியவை மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சவுதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி நந்தகோபால், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனு அனுப்பி உள்ளார் .

அதில் பல வகையான பழம் மற்றும் மரச் செடிகளை வெட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 5000க்கும் மேற்பட்ட மரம் மற்றும் செடிகள் தொடர்ந்து கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், மீண்டும் இதுபோல் சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து மனு அனுப்பியுள்ளார்.

Tags

Next Story