சேதுபாவாசத்திரம் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் நீரால் பொதுமக்கள் அவதி

சேதுபாவாசத்திரம் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் நீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி, அப்துல் கலாம் நகரில், 50 க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்களைச் சேர்ந்த, சிறுபான்மையினர் நூற்றுக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இதன் மூலம், இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து, தண்ணீர் சாலையில் வழிந்தோடி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

இதன் காரணமாக, அப்பகுதியில் செடி, கொடிகள் மண்டி, மண் சாலையே தெரியாத வகையில் வயற்காடு போல் புதர் மண்டிக் கிடைக்கிறது. தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, கொசுக்கடியால் இரவில் தூங்க முடியாத வகையில் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், கடும் துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலங்களில் இதை விட கடும் அவதியை இப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர். இப்பகுதியில், சாலை அமைக்க, ஒன்றிய குழு உறுப்பினர் நிதி ஒதுக்கியும் இதுவரை சாலை அமைக்கப்படாத நிலை உள்ளது.

தண்ணீர் தேங்கி நிற்பதால் பகுதி பொதுமக்கள் காய்ச்சல், தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இந்த இடத்தை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பை அகற்றி, இப்பகுதியில் தண்ணீர் தேங்காதவாறு வடிகால் வசதி செய்தும், பொதுமக்கள் பயன்படும் வகையில் தார்ச்சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் சார்பில், சிபிஎம் கிளைச் செயலாளர் நிஜாம், ஒன்றியக் குழு உறுப்பினர் பி.பெரியண்ணன் ஆகியோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story