தரங்கம்பாடி அருகே சாலை விபத்து - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி சீர்காழி -காரைக்கால் சாலையில் பைக்குகள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

கடலூர் மாவட்டம் மஞ்சாங்குப்பத்தை சேர்ந்த முகமது ஷகின் , ஹரி , ஆகாஷ் ஆகிய மூவரும் நாகப்பட்டிணத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டு விட்டு நேற்று திரும்பி கடலூருக்கு ஒரே இருசக்கர வாகனத்தில் (கேடிஎம்) மூவரும் சென்றுள்ளனர். அப்போது தரங்கம்பாடி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது தனியார் கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த தரங்கம்பாடியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் 3 பேரும் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்துள்ளனர்.

அப்போது எதிரே செங்கல்லை ஏற்றி வந்த டிராக்டர் கீழே விழுந்த மூவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி 3 பேரும் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த மற்றொரு வாகனத்தில் வந்த ஸ்ரீதரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த பொறையார் தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் போலீசார் இறந்த நபர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்ட ஶ்ரீதர் மேல்சிகிச்சைக்காக நாகப்பட்டிணம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இச்சம்பவம் தொடர்பாக பொறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய டிராக்டரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story