சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி

ராசிபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

ஆண்டுதோறும் ஜனவரி 11ம் முதல் 17ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, ராசிபுரம் ஜே சி ஐ மெட்ரோ, முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி ராசிபுரம் போக்குவரத்து காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் அருகே இருந்து தொடங்கிய இந்த பேரணியை ராசிபுரம் போக்குவரத்து எஸ்.ஐ., நடராஜன், காவல் உதவி ஆய்வாளர் சிவா, ஆகியோர் தொடங்கி வைத்தார்.

இந்த பேரணி நாமக்கல் ரோடு, சேலம் ரோடு, பெரிய கடைவீதி, சின்ன கடை வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இந்த பேரணியில் தனியார் பள்ளி, மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சாலை பாதுகாப்பு அவசியத்தை குறித்து கோசங்கள் எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு பேரணியில் தனியார் அமைப்பினர், கல்லூரி நிர்வாகத்தினர், காவல் துறையினர், மாணவ மாணவிகள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story