சாலையோரத்தில் கொட்டப்படும் மருத்துவக் கழிவு தொற்றுநோய் பரவும் அபாயம் !

சாலையோரத்தில் கொட்டப்படும் மருத்துவக் கழிவு தொற்றுநோய் பரவும் அபாயம் !

மருத்துவக் கழிவு

ஜெயங்கொண்டம் பகுதியில் சாலையோரத்தில் தொடர்ந்து கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயத்தால் மருத்துவ கழிவுகளை அதிகாரிகளின் உத்தரவுகளை மீறி கொட்டுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

அரியலூர், ஜூன் 8- ஜெயங்கொண்டம் பகுதியில் சாலையோரத்தில் தொடர்ந்து கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் உத்தரவுகளையும் மீறி மருத்துவ கழிவுகளை கொட்டும் விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பெரியவளையம் வனத்துறைக்கு சொந்தமான முந்திரித்தோப்பு அருகே மழைநீர் வடிகால் வாய்க்கால் ஓடுகிறது. இதன் அருகே 5-க்கும் மேற்பட்ட இடங்களில் சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தும் வகையில் சமூக விரோதிகள் சிலர் மருத்துவ கழிவுகளை ஆங்காங்கே கொட்டிவிட்டு சென்று விட்டனர். மேலும் அதே இடத்தில் இறைச்சி கழிவுகள், உடைக்கப்பட்ட சாராயப் பாட்டில்கள் ஆகியவை கொட்டப்பட்டு இருப்பதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு வரலாற்று சிறப்புமிக்க மாமன்னன் ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட பொன்னேரியில் மூட்டை மூட்டையாக மருத்துவக் கழிவுகளை கொட்டி அசுத்தப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது பெரியவளையம் பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாலையோரங்களில் மருத்துவக் கழிவுகளை கொட்டக்கூடாது என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்தும், அதனை மதிக்காத சமூக விரோதிகள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்த சில தினங்களாக போலி மருத்துவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் அரங்கேறி வரும் நிலையில், இது போன்ற மருத்துவ கழிவுகளை கொட்டுபவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story