ஆள்மாறாட்டம் மூலம் ரூ.35 லட்சம் நிலமோசடி : இருவர் கைது

ஆள்மாறாட்டம் மூலம் ரூ.35 லட்சம் நிலமோசடி : இருவர் கைது

இருவர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள நிலத்தை ஆள்மாறாட்டம் மூலம் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அண்ணாநகர் காலனியை சேர்ந்த லிங்கம் மனைவி மாரியம்மாள் என்பவரது தாயார் முனியம்மாள் மற்றும் அவரது பெரியம்மா வேலம்மாள் ஆகியோர்களுக்கு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கிராமத்தில் ரூபாய் 35 லட்சம் மதிப்புள்ள 1 ஏக்கர் 6 செண்ட் நிலமானது பூர்விகமாக பாத்தியப்பட்டது. மேற்படி நிலத்திற்கு முனியம்மாள் மற்றும் வேலம்மாள் ஆகிய இருவர் பெயரிலும் கூட்டுபட்டாவாக தாக்கலாகி உள்ளது. இந்நிலையில் வேலம்மாள் கடந்த 1996ம் ஆண்டும், முனியம்மாள் 2006ம் ஆண்டும், மேற்படி மாரியம்மாளின் சகோதரர் வேல்சாமி மற்றும் அவரது தந்தை அய்யாத்துரை ஆகியோர்களும் இறந்துவிட்டனர். எனவே மேற்படி நிலமானது மாரியம்மாளுக்கு பாதியும், மாரியம்மாளின் பெரியம்மா வேலம்மாளின் வாரிசுகளுக்கு பாதியும் பாத்தியப்பட்டது. இந்நிலையில் மேற்படி மாரியம்மாள் குளத்தூர் கிராமத்தில் வசித்து வருவதை தெரிந்து கொண்ட மாரியம்மாளின் பெரியம்மா வேலம்மாள் மகன் அருணாசலம் என்பவரின் மகனான அழகுவேல்ராஜ் என்பவர் மேற்படி சொத்தை முழுவதும் அபகரிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில், அவருக்கு தெரிந்த கீழஅரசரடி பகுதியை சேர்ந்த பொன்னையா மகன் அந்தோணி (எ) அந்தோணிசாமி (63) என்பவருடன் கூட்டு சேர்ந்து இரண்டு வயதான பெண்களை அழைத்து வந்து அவர்களை மேற்படி மாரியம்மாளின் தாயார் முனியம்மாள் மற்றும் பெரியம்மா வேலம்மாள் ஆகியோர்கள் போன்று ஆள்மாறாட்டம் செய்து ஓட்டப்பிடாரம் கிராமத்தில் உள்ள மேற்படி 1 ஏக்கர் 6 செண்ட் நிலத்தை கடந்த 2015ம் ஆண்டு தூத்துக்குடி கீழூர் சார்பாதிவாளர் அலுவலக பொது அதிகார ஆவண எண் 3803/2015ன்படி மேற்படி அந்தோணி (எ) அந்தோணிசாமிக்கு மோசடியாக பவர் கொடுத்துள்ளார்கள். மேற்படி பவர் ஆவணத்தில் அந்தோணி (எ) அந்தோணிசாமி மற்றும் அழகுவேல்ராஜ் ஆகியோருக்கு தெரிந்த தூத்துக்குடி ஐயர்விளை பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் முனியசாமி மற்றும் தூத்துக்குடி குறுக்குசாலை பகுதியை சேர்ந்த வேல்சாமி மகன் கிருஷ்ணசாமி (62) ஆகியோர்கள் மோசடி மற்றும் ஆள்மாறாட்ட விபரம் தெரிந்து சாட்சியாக கையொப்பம் செய்துள்ளார்கள். மேலும் அப்போதைய சார்பதிவாளரும் மோசடியாக பதிவு செய்து கொடுத்துள்ளார். பின்னர் அந்தோணி (எ) அந்தோணிசாமி மற்றும் அழகுவேல்ராஜ் ஆகியோர் சேர்ந்து மோசடியாக பதிவு செய்யப்பட்ட பவரை பயன்படுத்தி மேற்படி சொத்தை பதிவு செய்யப்படாத பிளாட்டுகளாக பிரித்து அதில் ஒரு பகுதியை அந்தோணி (எ) அந்தோணிசாமி கடந்த 2015ம் ஆண்டே ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக அழகுவேல்ராஜ்க்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார். மேலும் பிளாட்டுகளை பலநபர்களுக்கு அந்தோணி (எ) அந்தோணிசாமி கிரையம் செய்து கொடுத்தும் லாபம் அடைந்துள்ளார்கள். இதுகுறித்து மேற்படி மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்ற பிரிவு - II போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தவின்படி மாவட்ட குற்ற பிரிவு - II காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன் மேற்பார்வையில் மாவட்ட குற்ற பிரிவு - II காவல் ஆய்வாளர் இந்திரா தலைமையில் சார்பு ஆய்வாளர் காமராஜ், தலைமை காவலர் அருணாசலம், முதல்நிலை காவலர் பன்னீர்செல்வம் ஆகியோர் மேற்படி எதிரிகளான அந்தோணி (எ) அந்தோணிசாமி மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோரை இன்று கைது செய்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட குற்ற பிரிவு - II போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story