பேராவூரணியில் ரூ.3.70 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள்

பேராவூரணியில் ரூ.3.70 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள்

அடிக்கல் நாட்டு விழா 

பேராவூரணி தொகுதியில் ரூ.3.70 கோடி மதிப்பில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை எம்எல்ஏ அசோக்குமார் துவக்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, நாட்டாணிக்கோட்டை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வகுப்பறைக் கட்டடம், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், செல்வேந்திரன், கல்விப் புரவலர் சுப.சேகர், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், வட்டாரக் கல்வி அலுவலர் கா.கலாராணி, பேரூராட்சி கவுன்சிலர்கள் வீ.ப.நீலகண்டன், மணிமாலா நீலகண்டன், பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வீராசா‌மி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி பார்கவி, ஒன்றியப் பொறியாளர் பாரதிதாசன், கட்டுமானப் பொறியாளர் சங்கம் மாநில துணைத் தலைவர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சொர்ணக்காடு பேராவூரணி ஒன்றியம் சொர்ணக்காடு அருள்மிகு காளியம்மன் கோயில் விழா மேடை, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் இதற்கான அடிக்கல் நாட்டினார். இதில், ஊராட்சி மன்றத் தலைவர் விஜயபாஸ்கர், ரவிச்சந்திரன், நித்தியானந்தன் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

இந்திரா நகர் பேராவூரணி தாலுகா, மாவடுகுறிச்சி ஊராட்சி இந்திரா நகர், ஆண்டிக்கச்சல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் ரூ.3.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன், ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேல், தலைமை ஆசிரியர் ஐ.அன்பு மேரி, ஆசிரியர் நீலகண்டன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி பரிமளா, கல்வியாளர்கள் பெத்தபெருமாள், சிவகுமார், முருகேசன், ரமேஷ், எல்ஐசி நாகப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பழைய நகரம் பேராவூரணி வட்டம், பழைய நகரம்-சீவன்குறிச்சியில், பூனைகுத்தி காட்டாற்றின் குறுக்கே ரூ.2 கோடியே 66 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில், உயர்மட்டப் பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் சுரேகா அன்பழகன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கருணாமூர்த்தி, மா.மணிகண்டன், ராஜூ, நாராயணன், ராஜேந்திரன், ஆத்மநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாளத்தளி பாளத்தளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வகுப்பறைக் கட்டடம் ரூ.32.60 லட்சத்தில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலர் அ.அங்கயற்கண்ணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி, ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, ஒன்றியக்குழு உறுப்பினர் நவநீதம் ஆறுமுகம், ஊராட்சி மன்றத் தலைவர் விஜயா சுப்பிரமணியன், பள்ளி தலைமையாசிரியர் மீனாம்பிகை, டாக்டர் வி.சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மணவயல், கிராமத்தில் புதிய சாலை மற்றும் சுடுகாடு சிறு பாலம், ரூ.10.40 லட்சத்தில், அமைக்கப்படுவதற்கான பணியையும், அதனைத் தொடர்ந்து பூவாளூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம், ரூ.32.60 லட்சத்தில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கான கட்டுமான பணியையும் சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் தொடங்கி வைத்தார் இதில் பள்ளி தலைமை ஆசிரியை அன்புமதி மற்றும் கிராம பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆக மொத்தம் ரூ.3 கோடியே 70 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

Tags

Next Story