ஓசூரில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம்

ஓசூரில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம்

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் 

ஓசூரில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சீருடை அணிந்து ஓசூர் நகரில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 55 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஆர்எஸ்எஸ் இயக்கம் சார்பில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு தமிழக காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆர்எஸ்எஸ் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க வேண்டி மனு அளிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி நேற்று தமிழகத்தில் 55 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக ஓசூரில் ஆர்எஸ்எஸ் இயக்கம் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. ஓசூர் பாகலூர் ஹவுசிங் போர்டு பகுதியில் இருந்து துவங்கப்பட்ட அணிவகுப்பு ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க சீருடை அணிந்து ஊர்வலமாக சென்றனர். பாகலூர் ஹவுசிங் போர்டு, பாகலூர் சாலை, ஓசூர் பேருந்து நிலையம், பழைய பெங்களூர் சாலை, ஏரித்தெரு மற்றும் ராமநாயக்கன் ஏரிக்கரை வழியாக இந்த அணிவகுப்பு ஊர்வலம் ஓசூர் கோட்டை மாரியம்மன் கோயில் அருகே உள்ள மைதானத்திற்கு சென்றது.அணிவகுப்பு ஊர்வலத்தை தொடர்ந்து கோட்டை மாரியம்மன் கோயில் அருகே உள்ள மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை முன்னிட்டு ஓசூர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story