உப்பு சத்தியாகிரக யாத்திரை குழுவுக்கு தஞ்சாவூரில் வரவேற்பு

உப்பு சத்தியாகிரக யாத்திரை குழுவுக்கு தஞ்சாவூரில் வரவேற்பு

உப்பு சத்தியாகிரக குழுவுக்கு சிறப்பான வரவேற்பு

உப்பு சத்தியாகிரக யாத்திரை குழுவுக்கு தஞ்சாவூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சியிலிருந்து வேதாரண்யம் செல்லும் உப்புச் சத்தியாகிரக தண்டி யாத்திரையின் 94 ஆம் ஆண்டு நினைவு யாத்திரை குழுவுக்கு தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள டி.எஸ்.எஸ்.ராஜன் பங்களா நினைவு தூணுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை மாலை அணிவித்து வேனில் புறப்பட்ட இக்குழுவினர் தஞ்சாவூருக்கு வந்தனர்.

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவு குழுத் தலைவரும், யாத்திரை குழுத் தலைவருமான தெ.சக்தி செல்வகணபதி தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மன்னை எஸ். மதியழகன், தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்க மாநிலத் தலைவர் ம. ஆறுமுகம், பொதுச் செயலர் ப. பன்னீர்செல்வம் உள்பட ஏறத்தாழ 15 பேர் இடம்பெற்றுள்ளனர்.

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு இக்குழுவினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். இவர்களை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.ஜி. ராஜேந்திரன், பொதுக் குழு உறுப்பினர்கள் ஏ.ஜேம்ஸ், வயலூர் எஸ். ராமநாதன், பொருளாளர் ஆர். பழனியப்பன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இக்குழுவினர் வேதாரண்யத்துக்கு சென்று திங்கள்கிழமை உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு, செவ்வாய்க்கிழமை உப்பு அள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

Tags

Next Story