ஆட்சியர் தலைமையில் சமத்துவ பொங்கல்

ஆட்சியர் தலைமையில் சமத்துவ பொங்கல்

பொங்கல் கொண்டாட்டம் 

சேலத்தில் ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் சுற்றுலாப் பயணிகள், முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகத்தினர், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். இதில் சுற்றுலாப் பயணிகள், முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் உள்ளவர்கள் உள்பட ஏராளமானவர்கள், பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி கலெக்டர் அலுவலகம் முழுவதும் மலர்கள், வண்ண கோலங்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன. விழாவையொட்டி தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கூட்டு பிரார்த்தனை மேலும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்ட கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

மேலும், உறியடி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் கார்மேகம் பரிசு வழங்கினார். பச்சரிசி, திணை, குதிரைவாலி, சாமை, வரகு ஆகிய சிறுதானியங்கள் மூலம் 5 மண் பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டன.தொடர்ந்து கலெக்டர் கார்மேகம் மற்றும் அலுவலர்கள், வெளிநாட்டுப் பயணிகள் சிலர் மாட்டு வண்டியில் ஏறி கலெக்டர் அலுவவலகத்தை சுற்றி வலம் வந்தனர். சமத்துவ பொங்கல் விழாவில் மேயர் ராமச்சந்திரன், சதாசிவம் எம்.எல்.ஏ., கூடுதல் கலெக்டர் அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story