தங்க சிம்ம வாகனத்தில் சமயபுரம் மாரியம்மன் திருவீதி உலா

தங்க சிம்ம வாகனத்தில் சமயபுரம் மாரியம்மன் திருவீதி உலா

சமயபுரம் மாரியம்மன் 

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார விழாவின் 11 ம் நாளான நேற்று அம்மன் தங்கசிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகாரம் என்பது வசந்த உற்சவம் ஆகும். பஞ்சபூதங்கள், ஐம்பெரும் தொழில், ஐம்பெரும் கலை, ஐம்பெரும் பீடம் மற்றும் ஐம்பெரும் உயிர் அவத்தைகள், இவற்றை விளக்கும் தத்துவமாக இந்த பஞ்சப்பிரகார உற்சவம் உள்ளது. இக்கோவிலில் அக்னி நட்சத்திரத்தின் உஷ்ணு கிராந்தியை தணிப்பதற்காக கடந்த 5 ந்தேதி வசந்த உற்சவம் தொடங்கியது. இந்த உற்சவம் வருகி்ன்ற 22-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி இரவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைப்பெற்று முதல் 8 நாட்களுக்கு இரவில் அம்மன் வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.முக்கிய நிகழ்வான பஞ்சப்பிரகார விழா கடந்த 14 ந்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டாச்சாரியார்கள் வடகாவிரியில் இருந்து வெள்ளிக்குடம் மற்றும் யானை மீது தங்கக் குடத்தில் தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்து பஞ்சப்பிரகார மகா அபிஷேகம் நடைபெற்றது.

இந்நிலையில் விழாவின் 11 ம் நாளில் அம்மன் தங்கசிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.இன்று நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் முத்துப் பல்லக்கில் எழுந்தருளுகிறார். 17-ந் தேதி தங்க கமல வாகனத்திலும், 18- ந்தேதி வெள்ளிக்குதிரை வாகனத்திலும், 19-ந்தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், 20-ந் தேதி மரகற்பக விருட்ச வாகனத்திலும், 21-ந்தேதி மரகாமதேனு வாகனத்திலும். 22-ந் தேதி அம்மன் மர அன்னபட்சி வாகனத்தி லும் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோவில் இணை ஆணையர் , ஆகியோர் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story