தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் 

கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தரமற்ற தூய்மை பொருட்கள் வழங்கப்படுவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இன்று பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை:அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் மூலம் தூய்மை பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பினாயில்,ஆசிட், பிளிச்சிங்பவுடர் போன்ற தூய்மை பொருட்களால் அடிக்கடி தூய்மை பணியாளர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆசிட் ஊற்றி மருதரதுவமனை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட பொழுது இருளாயி என்ற தூய்மை பணியாளருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பினார்.எனினும் தொடர்ச்சியாக அவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தரமற்ற தூய்மை பொருட்கள் வழங்கப்படுவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இன்று பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூய்மை பணிகளுக்கு தரமான பொருட்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் தூய்மை பணியாளர்களுக்கு கையுறை உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்த அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் தங்களை இதுவரை மருத்துவமனை நிர்வாகம்,ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் தெரிவித்தனர்.போராட்டம் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story