வைகாசி அமாவாசை : சதுரகிரி மலையில் பக்தர்கள் தரிசனம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம் அமாவாசை பௌர்ணமி ஆகிய நாட்கள் மட்டுமே மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அனுமதி என்பது வழங்கப்படும்

இந்நிலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் வைகாசி மாதம் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய ஜுன் 4,5, 6, 7, ஆகிய நான்கு நாட்கள் வழங்கப்பட்ட நிலையில் இன்று வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு அதி காலையில் முதல் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வருகை தந்த ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் சதுரகிரி செல்லும் ஆற்று பாதைகளில் நீர் வந்து கொண்டிருப்பதால் பக்தர்கள் ஓடைகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கோவிலில் இரவில் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தவுடன் மாலை 5 மணிக்குள் அடிவாரப் பகுதியை நோக்கி வந்துவிட வேண்டும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story