வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை

பைல் படம்

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் 2006–ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக பதிவை புதுப்பித்திருக்க வேண்டும். 2018-ஆம் ஆண்டு டிசம்பர்.31-ஆம் தேதியன்று அல்லது அதற்கும் முன்பாக பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200-ம், பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600-ம் என வழங்கப்பட்டு வருகிறது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவராயின் 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினராயின் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளி இறுதி வகுப்புவரை படித்தவர்களுக்கு மாதம் ரூ.600 ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1000-ம், உதவித்தொகையாக 10-ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. பதிவுசெய்து 2023 ஆம் ஆண்டு டிசம்பர்-31ம் தேதி அன்று ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். இவர்களுக்கு வருமானம் மற்றும் வயது உச்ச வரம்பு ஏதுமில்லை.

உதவித்தொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழு நேர மாணவராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூரக்கல்வி பயில்பவராக இருக்கலாம். அரசுத்துறை அல்லது தனியார் துறையில் ஊதியம் பெறும் எந்த பதவியிலோ அல்லது சுயவேலை வாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருக்கக்கூடாது. முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும். தகுதி உடையவர்கள்; இதற்கான விண்ணப்ப படிவத்தை (https;//tnvelaivaaippu.gov.in) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதனை பயன்படுத்துமாறு அரசு விதிமுறைகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்படிவத்தில் அனைத்து கலங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகலுடன் மார்ச்-31ம் தேதிக்குள் அலுவலக வேலைநாட்களில் மணிமண்டபம் எதிரில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அளிக்க வேண்டும்.

உதவித்தொகை ஏற்கெனவே பெற்று வருவோரின் கவனத்திற்கு:- அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து வருடங்களுக்கும், பொதுப்பிரிவினர்களுக்கு மூன்று வருடங்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை தொடங்;கிய காலத்திலிருந்து பயனாளிகள் ஒவ்வொரு ஆண்டிலும் சுய உறுதிமொழி ஆவணம் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். அவ்வாறு சுய உறுதிமொழி ஆவணம் அளிக்கத் தவறியவர்கள் உடன் சுய உறுதிமொழி ஆவணத்தை பூர்த்தி செய்து தவறாது நேரில் வந்து அளிக்க வேண்டும்.

மேலும் வேறு எந்த அலுவலகத்திலும் அரசால் வழங்கப்படும் எந்த நலத்திட்டங்களிலும் உதவித்தொகைப் பெற்று வருபவர்கள் இத்திட்டத்தில் பயனடைய தகுதியற்றவர்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story