குடிபோதை சிகிச்சை மறுவாழ்வு மையம் மற்றும் மனநல மருத்துவமனைக்கு சீல்
சீல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த குச்சிப்பாளையம், அய்யப்பன் நகரில், லோட்டஸ் பவுண்டேஷன் சார்பில், குடிபோதை சிகிச்சை மறுவாழ்வு மையம் மற்றும் மனநல மருத்துவமனை இயங்குகிறது. இதன் உரிமையாளர் காமராஜ், 54. ஜா.சித்தாமூரைச் சேர்ந்த பொன்முடி மகன் ராஜசேகர், 38, என்பவர், கடந்த, 5ம் தேதி முதல் இங்கு சிகிச்சையில் இருந்து வந்தார்.
மேலும், 25 பேர் இங்கு சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த 8ம் தேதி அதிகாலை உடல்நிலை சரியில்லை எனக்கூறி ராஜசேகரை மறுவாழ்வு மைய ஊழியர்கள் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், ராஜசேகரின் உடலில் காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, திருக்கோவிலுார் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், கடுமையாக தாக்கப்பட்டதால் ராஜசேகர் உயிரிழந்தது தெரிய வந்தது. மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் திருக்கோவிலுாரைச் சேர்ந்த காமராஜ், 54, சிகிச்சை பெற்று வந்த சந்தைப்பேட்டையை சேர்ந்த ஜமால், 30, உள்ளிட்ட ஆறு பேர் மீது கொலை வழக்கு பதிந்து, கைது செய்தனர்.