தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு சீல்
![தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு சீல் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு சீல்](https://king24x7.com/h-upload/2024/06/28/566505-image3a1000630488.webp)
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மளிகை கடைகள் மற்றும் டீ கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பரமத்திவேலுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் மற்றும் பரமத்திவேலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி ஆகியோர் குப்பிச்சிபாளையத்தில் உள்ள திலகவதி என்பவது மளிகை கடை, வேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள செல்வராஜ் என்பவரது டீ கடை, பொத்தனூரில் உள்ள சிவகாமி என்பவர் மினி மளிகை கடை, அண்ணா நகரில் உள்ள தனசேகரன் மற்றும் மணிமேகலை ஆகியோரது டீ கடை உள்ளிட்ட 5 கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அதனையடுத்து 5 கடைகளுக்கும் தலா ரூ. 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு 5 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர். மீண்டும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை விடுதுள்ளனர்.