தமிழ் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம் 

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சமூகங்களுக்கான உரையாடல் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்கள் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

தமிழ் பல்கலைக்கழகத்தில், சமூக அறிவியல் துறை சார்பாக, ”சமூகங்களுக்கான உரையாடல்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், சமூக அறிவியல் துறை, தலைவர் மற்றும் இணை பேராசிரியர் முனைவர் சா.சங்கீதா வரவேற்றார். கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் உதவிப் பேராசிரியர் முனைவர் மா. அறிவானந்தன், கருத்துரையாற்றினார். வளர்தமிழ் புலத்தலைவர் முனைவர் பேராசிரியர் குறிஞ்சிவேந்தன் வாழ்த்திப் பேசினார். தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் திருவள்ளுவன், மாணவர்கள் சமூகம் சார்ந்த உரையாடல்கள் செய்ய வேண்டும். சமூகம் சார்ந்த சிந்தனையை வளர்க்க வேண்டும். ஊடகங்களினால் தனித்து விடாமல் சமூகங்களின் இடையேயான உரையாடல்கள் வளர்த்திடல் வேண்டும்" என்று தலைமை உரையாற்றினார்.

மேலும், இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு, சமூக நீதி கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் பேசினார். அதனைத் தொடர்ந்து, குழு உரையாடல் அமர்வு நடைபெற்றது, அதில் மாணவர்களும் சமூகமும் என்ற தலைப்பில், தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் பி.சுப்பிரமணியன் பேசினார். மருத்துவமும் சமூகமும் என்ற தலைப்பில், தஞ்சாவூர் ஆருத்ரா சைக்காலஜி கவுன்சிலிங் கிளினிக், மருத்துவர் பா.சந்திரபோஸ், நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் இடையே வெளிப்படையான உரையாடல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் உணர்வுசார் நுண்ணறிவு பற்றியும் கூறினார்.

நிறைவாக பொது சமூகக் கூறுகள் என்ற தலைப்பில், தஞ்சாவூர் நீர்வளத்துறை சமூக பாதுகாப்பு நிபுணர் எஸ்.வீரபாண்டியன், 'மாணவர்களுக்கான பொது சட்டங்கள் மற்றும் அரசாங்க சலுகைகள் பற்றி மாணவர்களுக்கிடையான விழிப்புணர்வு வேண்டும்" என்று கூறினார். நிறைவாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் தமிழ் பல்கலைக்கழகம், சமூகப் பணித்துறை, உதவி பேராசிரியர் முனைவர். மா.அறிவானந்தன், நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags

Next Story