விருதுநகரில் நாடகக்கலை, கோயிற்கலை குறித்த கருத்தரங்கம்

விருதுநகரில் நாடகக்கலை, கோயிற்கலை குறித்த கருத்தரங்கம்

கருத்தரங்கத்தில் கலந்து கொண்டவர்கள் 

விருதுநகர் மாவட்டம் நாடகக்கலை, கோயிற்கலை குறித்த கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி இணைந்து நடத்திய நாடகக்கலை, கோயிற்கலை குறித்த இரண்டுநாள் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. பி

ன்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்ததாவது: நமது பண்பாட்டு சூழலில் நாடகக்கலை மற்றும் கோயிற்கலை இந்த இரண்டும் அடுத்த தலைமுறைக்கு அறிவியல் நுட்பத்தோடு எடுத்துச் செல்வதற்கும் அவற்றினுடைய கலை பண்பாட்டை புரிந்து கொள்வதற்கும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

மேலும், 5000 ஆண்டுகள் இருக்கக்கூடிய பண்பாட்டு தொடர்ச்சியில் ஏறத்தாழ 2500 ஆண்டுகள் எழுதப்பட்ட இலக்கியங்கள் இருக்கக்கூடிய ஒரு அறிவு சமூகத்தில் நாடகக்கலையின் வாயிலாக அறிவு கடத்தப்படுவது தொடர்ச்சியாக காலம் காலமாக நடந்து கொண்டு வருகிறது. சங்க இலக்கியத்தில் பல பாடல்களை பார்த்தால் அதுவும் நாடக பாங்கான சூழலில் அமைந்துள்ளது.

அதாவது புறநானூறில் புறம் சார்ந்த பாடல்கள் இருந்தாலும், அகநானூற்றில் அகம் சார்ந்த பாடல்கள் இருந்தாலும் அல்லது குறுந்தொகை பாடலாக இருந்தாலும் அனைத்துமே நாடகப் பாங்கான தன்மையில் தான் சங்க இலக்கியம் முழுவதும் இருக்கிறது. அதற்குப் பிறகு வந்த வாழ்வியல் சார்ந்த இலக்கியங்கள் முழுவதுமாகவே நாடகப் பாங்காக தான் இருந்தது.

அதுவும் குறிப்பாக சிலப்பதிகாரம் நாடகக்காப்பியம் என்று சொல்லக்கூடிய அளவில் மிக முக்கியமான வாழ்வியல் கருத்தை நாடகப் பாங்கோடு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. சிலப்பதிகாரத்தை நாம் ஏன் குடிமக்கள் காப்பியம் என்று சொல்கிறோம் என்றால், சாதாரண ஒரு குடிமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கூட, அதிகாரத்தில் இருக்கக்கூடிய ஒரு மன்னனை நோக்கி கேள்வி கேட்பதற்கான உரிமை இருக்கிறது.

அது தான் ஒரு ஜனநாயக மாண்பு. அந்த உரிமையை விட அதை கேட்டதற்கான தைரியம், ஆற்றல் அந்த பெண்ணுக்கு வேண்டும் அது அடிப்படையில் சொல்வது தான் குடிமக்கள் காப்பியம் என்கிறோம்... இதனை நாடகக்காப்பியம் என்று கூறுகிறார்கள். ஏனென்றால்,இதில் முழுவதுமாக இயல்பான நாடகத்தை இயக்கக்கூடிய அளவிற்கு மக்களுக்கான செய்திகளை கொண்டு சேர்க்கக் கூடிய நாடக பாங்கின் இலக்கியத்தின்; உச்சமாக தமிழ் இலக்கியம் இருப்பது சிலப்பதிகாரம் காப்பியங்கள்.

கம்பராமாயணம் முழுவதுமே ஒவ்வொரு பாடலும் நாடகபாங்கில் தான் இருக்கும். நமது இலக்கியங்கள் முழுவதுமே நாடக பாங்கான இலக்கியங்கள் தான். அதுவும் பிற்காலத்தில் நமது சுதந்திர போராட்ட காலக்கட்டத்தில் பல தமிழ் நாடகங்கள் தடை செய்யப்பட்டது. அது குறிப்பாக பாஸ்கர சேதுபதி என்ற மிகச் சிறந்த எழுத்தாளர் நாடகங்கள் அதிகமாக எழுதியுள்ளார். அவருடைய நாடகங்கள் பல தடை செய்யப்பட்டது.

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது வெள்ளை காக்கா என்று புகழ் பெற்ற நாடகம். அந்த நாடகத்தில் வெள்ளையர்களை குறிப்பிட்டு சொல்வதற்காக வெள்ளை காக்கா என்ற தலைப்பில் மிகவும் பிரபலமான நாடகத்தை நாடகத்தின் மூலமாகத்தான் இந்த சமுதாயத்தின் உடைய அடுத்தடுத்து மக்களின் வழித்தடங்கள் பேசப்பட்டனர். இந்த சமுதாயத்தின் உடைய பிரச்சனைகள் பேசப்பட்டன.

குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ள மக்கள், கழுவிறக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் இந்த நாட்டின் இருக்கக்கூடிய சமூக அநீதிகள் அனைத்தையும் தைரியமாக நாடகங்கள் மூலமாக பேசப்பட்டன. நம்முடைய பழைய வரலாற்றை புரிந்து கொள்வதற்கு வரலாற்று ஏடுகளை விட வரலாற்று நாடகங்கள்; மிகப்பெரிய அளவில் பங்கு வகிக்கின்றன. நம்முடைய மரபு என்பது மிகவும் இலக்கிய கலந்த நாடக மரபு.

நாடக மரபு சங்க இலக்கியங்களில் இருந்து இன்றைக்கு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் இலக்கியம் வரை தொடர்ச்சியாக இருக்கிறது. இதிலிருந்து கற்றுக்கொள்வது நிறைய உள்ளது . அதற்கு பிறகு நமது நாடகமரபு பெரிதாக ஏற்றம் பெறவில்லை. அதுவும் குறிப்பாக நமது நவீனஊடகங்கள், காட்சி ஊடகங்கள், சினிமா ஊடகங்கள் வந்த பிறகு அதற்கான இடத்தை பெறவில்லை. அதற்கான இடங்களும் சுருங்கிவிட்டது. மேலும், தமிழில் நிறைய நாடகங்கள், அதாவது சுதந்திர காலகட்டத்தில் நாடகங்கள் நடத்துவது என்பது மிகப்பெரிதாக இருந்தது.

தற்பொழுது நவீன தொழில்நுட்பம் அதிகமாக வந்துள்ளது. ஸ்ரீராம்ஷர்மா என்பவர் வேலுநாச்சியார் பற்றி நாடகங்களை எல்லாம் எழுதியுள்ளார். பின்னர் சுதந்திரப் போராட்டத்தை கண்முன்னே கொண்டுவரக் கூடியதாகவும், அந்தபோராட்டதை எப்படி வென்றார்கள் என்றும், எப்படி சூழ்ச்சிகளை மேற்கொண்டார்கள் என்றும், வரலாற்றுப்புத்தகங்களில் பல பக்கங்களை படித்து அறிவதை ஒரு சிலமணித்துளிகளிலே நாடகங்களாக அரங்கேற்றக் கூடிய வகையில் நாடகம் அமைந்திருக்கும்.

பாண்டியர் கால கட்டிடகலையில், ஓவியக்கலை மிகுந்த செல்வாக்கை பெற்றுள்ளது . நமது கட்டிடக்கலைகள் மிகநுட்பமாக பேசுவது பாறைஓவியம். பல்லவர்கள் கால குடைவரைக்கோவில்கள் அனைத்தும் மன்னர்கள் காலத்தின் குடவரைக்கோவில்களின் உச்சமாகும்.

ஒரு குடவரைக்கோவில் என்பது ஒரு மன்னரால் மட்டும் கட்டி முடிக்கமுடியாது. அது ஒரு நீண்டகாலதிட்டம் ஆகும். பாண்டியர்கள் கால கட்டுமானங்கள் தொடர்ச்சியாக முழுமையாக பராமரிக்கப்படவில்லை. மதுரைக்கு தெற்கே பாண்டியர் கால கட்டுமான கோவில்கள், குடவரை கோவில்கள், சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் அதிகமாக இருக்கின்றன. மேலும், சமண மதத்திற்கு அதிகமான இடங்களை வழங்கியது முற்கால பாண்டியர்கள் தான். தென் தமிழ்நாட்டில் பாண்டியர்களின் கோவில்களும், கட்டிட கலையும் , சிற்பக்கலையும்,

ஓவியக்கலையும் இவற்றோடு சேர்த்து, மற்ற கலைகளும் விளங்கக்கூடிய இடங்களாக பாண்டியர்களுடைய கட்டுமானங்கள், குறிப்பாக கோயில் கட்டுமானங்கள் இருந்தன. நம்மை சுற்றி என்னென்ன கலைகள், வரலாற்றுக்கருவிகள் இருந்தன அவற்றையெல்லாம் பார்த்து அவற்றின் தன்மையை எல்லாம் விமர்சனம் செய்வதற்கும், அவற்றின் தற்கால மதிப்பீடுகள் குறித்து மதிப்பீடு செய்வதற்கும் உரிய அறிவில் சிறந்த மாணவர்களாக, ஆசிரியர்களாக உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இ

ந்நிகழ்வில், மதுரை கலைடாஸ்கோப் நாடக நிறுவனர் முனைவர் இரா.பிரபாகர் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், அரங்கம் மற்றும் திரைப்படப் படிப்புகள் துறை உதவிப் பயிற்றுநர் திரு.பூ.பாஞ்சாலிராஜன் ஆகியோர் கற்றல் மேம்பாட்டில் நாடகக்கலை என்ற தலைப்பில் உரையாற்றி பயிற்சிகளை வழங்கினர். இந்நிகழ்வில் முதுகலைத் தமிழ்த்துறைத் தலைவர் ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருள்மொழி அவர்கள் வரவேற்புரையும்,

இளநிலைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சந்திரகுமார் நன்றியுரையும் ஆற்றினர்.

Tags

Next Story