அனுமதியின்றி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடை

அனுமதியின்றி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடை

தேநீர் கடை 

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவினரின் கடை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், பழைய ஊரக வளர்ச்சி துறை கட்டடம் உள்ளது. இங்கு, மகளிர் திட்ட இயக்குனர் அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், சமூக நலத்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த வளாகத்தில், ஜீப் நிறுத்துமிடத்தில், மகளிர் சுய உதவிக் குழுவினர், சிறுதானிய உற்பத்தி பொருட்கள் மற்றும் டீக்கடை வைத்துள்ளனர். இதுதொடர்பாக, பொதுப்பணித் துறையினரிடம் முறையாக அனுமதி பெறவில்லை என, கூறப்படுகிறது. பொதுவாக, கலெக்டர்அலுவலக வளாகத்தில் இருக்கும் கட்டடங்களில், ஏதேனும் மாற்றம் மற்றும் கூடுதல் விரிவாக்கம் செய்ய விரும்பினால், பொதுப்பணித் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். இதுகுறித்து, காஞ்சிபுரம் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மகளிர் திட்ட அதிகாரிகளின் அறிவுரையின்படி கடை வைத்துள்ளனர். ''அந்த கட்டடத்தில் மாற்றம் தொடர்பாக, எங்களிடம் அனுமதி பெறவில்லை. இதற்கு, வாடகையும் நாங்கள் நிர்ணயம் செய்யவில்லை. இது தொடர்பாக ஆய்வு செய்து முறையாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Tags

Next Story