தமிழ் பல்கலைக்கழகத்தில்  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

தமிழ் பல்கலைக்கழகத்தில்  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்ப் பண்பாட்டு கலை  மரபினை வளர்க்க, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழக அரசின் நிதி நல்கையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள, தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் முசிறி நிதிலாலயா இசை மற்றும் நடனப்பள்ளி, ஈரோடு தமிழி இசைக்களம் நாட்டார் கலை அறக்கட்டளை, ஓசூர் அபிநயம் ஆர்ட் அகாடமி அறக்கட்டளைகள் தர வகுப்புகள் மற்றும் சான்றிதழ், பட்டய வகுப்புகள் நடத்துவதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

நிதிலாலயா இசை மற்றும் நடனப்பள்ளி, தமிழி இசைக்களம் நாட்டார் கலை அறக்கட்டளை, அபிநயம் ஆர்ட் அகாடமி அறக்கட்டளை ஆகியன, தமிழ் மொழியை வளர்த்தெடுக்கும் நோக்கில் தமிழ் இலக்கியப் பாடல்களை இசை, நாட்டிய வடிவமாக்கி பல்வேறு நாடுகளில் அரங்கேற்றி வருகின்றன.

இவ்வகையில் தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பொழுது தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் கூறுகையில், "நிதிலாலயா இசை மற்றும் நடனப்பள்ளி, தமிழி இசைக்களம் நாட்டார் கலை அறக்கட்டளை, அபிநயம் ஆர்ட் அகாடமி அறக்கட்டளை தமிழிசையையும், தமிழ் நாட்டிய மரபினையும் மற்றும் தமிழர் கலைகளையும் கற்பிக்கும் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றும் வண்ணமாகத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துள்ளன.

இவ்வொப்பந்ததின் மூலம் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் வாயிலாக நடத்தப்பெறும் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், நாட்டுப்புறக்கலைகள், சிலம்பாட்டம் ஆகிய பாடப்பிரிவுகள் நிதிலாலயா இசை மற்றும் நடனப்பள்ளி, தமிழி இசைக்களம் நாட்டார் கலை அறக்கட்டளை, அபிநயம் ஆர்ட் அகாடமி அறக்கட்டளை வாயிலாக நடத்தப்பெற்று தமிழ்ப் பல்கலைக்கழகம் வழி தேர்வுகள் நடத்தவும் சான்றிதழ் வழங்கவும் வகை செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன், தமிழ்ப்பல்கலைக்கழக பதிவாளர் (பொ) முனைவர் சி.தியாகராஜன், நிதிலாலயா இசை மற்றும் நடனப்பள்ளி, தமிழி இசைக்களம் நாட்டார் கலை அறக்கட்டளை, அபிநயம் ஆர்ட் அகாடமி அறக்கட்டளை இயக்குநர்கள் ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாற்றிக் கொண்டனர்.

இந்நிகழ்வில், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் பெ.இளையாப்பிள்ளை, தமிழ்ப்பண்பாட்டு மைய இயக்குநர் முனைவர் செ.கற்பகம், கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story