பொற்கிழியில் பாதி பணம் தரவில்லை என புகார்

பொற்கிழியில் பாதி பணம் தரவில்லை என புகார்

பொற்கிழி பணம் மோசடி

அமைச்சர் உதயநிதி வழங்கிய பொற்கிழியில் பாதி பணம் திருடப்பட்டதாக மூத்த நிர்வாகிகள் புகார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே என்.வைரவன்பட்டியில் திமுக சார்பில் கட்சி மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி மொத்தம் 1,500 பேருக்கு பொற்கிழியை வழங்கி கவுரவித்தார். மேலும் பொற்கிழி வாங்கியோருக்கு ரூ.5,000 மதிப்புள்ள சேலை, வேட்டி, துண்டு, பை, வெள்ளி பதக்கம் ஆகியவற்றோடு ரூ.20,000 ரொக்கம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

விழாவில் பேசிய உதயநிதி, மற்ற மாவட்டங்களில் பொற்கிழி வாங்கியோருக்கு ரொக்கமாக ரூ.10,000 மட்டுமே வழங்கப்பட்டதாகவும், இனி மற்ற மாவட்டங்களிலும் சிவகங்கை மாவட்டத்தை போன்று ரூ.20,000 ரொக்கமும், ரூ.5,000 மதிப்பிலான பொருட்களும் வழங்க வேண்டுமெனவும் தெரிவித்தார். மேலும் நிகழ்ச்சியில் சிலருக்கு மட்டுமே ரொக்க பணம் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய நிர்வாகிகள் பணத்தை வழங்கினர்.

இந்நிலையில் கண்ணங்குடி ஒன்றியத்தை சேர்ந்த சிலருக்கு ரூ.8,500 முதல் ரூ.10,000 வரை மட்டுமே வழங்கியதாகவும், மீதியை நிர்வாகிகள் எடுத்து கொண்டதாகவும் பொற்கிழி வாங்கிய மூத்த உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். இதேபோல் மாவட்டத்தில் பொற்கிழி பெற்ற திமுக முன்னோடிகள் பலருக்கும் அறிவித்தபடி ரொக்க பணம் கொடுக்கவில்லையெனவும் புகார் எழுந்துள்ளது.

Tags

Next Story