திறன் மேம்பாட்டு பயிற்சி: அங்கன்வாடி பணியாளர்களுக்கு சான்றிதழ்

தாய் சேய் நலம் குறித்து நடத்தப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கு பெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சான்றிதழ்களை வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில், தாய் சேய் நலம் குறித்து நடத்தப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கு பெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: விருதுநகர் மாவட்டத்தில் தாய் சேய் சிசு இறப்பு விகிதத்தை குறைத்து விருதுநகர் மாவட்டத்தினை தாய் சேய் இறப்பு இல்லாத மாவட்டமாக உருவாக்க மாவட்ட நிர்வாகம் முன்னெடுப்பில் கடந்த ஒரு மாத காலம் தாய் சேய் நலம் குறித்த பயிற்சி நடைபெற்றது.

விருதுநகர்மாவட்டத்தில், மருத்துவ வசதிக்கு எந்த ஒரு குறைபாடும் கிடையாது. குறிப்பாக பேறுகாலத்தில் அவர்களுக்கு ஏற்பட கூடிய சிக்கல்கள் தவிர்ப்பதற்காக, குழந்தைபேறு அவர்களுக்கு மருத்துவமனையில் நடக்க வேண்டும். அதுவும் நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்களால் மற்றும் மருத்துவப்பணியாளர்களால் நடத்தப்பட வேண்டும் என்பது தான் அரசின் முக்கியமான மருத்துவக்கொள்கையாகும். நமது மாவட்டத்தில் இரண்டு தலைமை மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஊர்களிலும் 2 கி.மீ தொலைவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 10 கி.மீட்டருக்குள் அரசு மருத்துவமனை உள்ளன. குழந்தை இறப்பு விகிதம் என்பது ஒரு குழந்தை பிறந்து, ஒரு வருடத்திற்குள் இறந்து போவது என்பதாகும். மேலும், குழந்தை பிறப்பின் போது பிரசவத்தில் தாய்மார்கள் இறப்பு என்பது இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த இறப்பிற்கு காரணம் இவ்வளவு மருத்துவ வசதிகள் மட்டும் போதாது இதனை எவ்வாறு தடுப்பது என்பது பற்றிய விழிப்புணர்வு தாய்மார்களிடம் இல்லததுதான் காரணம். கர்ப்பகாலத்தில் ஆறு மாதத்திற்குள் தாய்மார்களுக்கு இரும்பு சத்தின் அளவு சரியாக இருப்பது குறித்தும் மற்றும் கர்ப்பகாலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் நமது மாவட்டம் சிறந்த மருத்துவ முறைகளை வழங்கி வந்தாலும், குழந்தை இறப்பு விகிதம் அதிக அளவு காணப்படுகிறது. அதனால் அங்கன்வாடி பணியாளர்கள் அனைவரும் கருவுற்ற தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறதா என்பது குறித்தும், அவர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் அவர்களின் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி மற்றும் மனவளர்ச்சி குறைவாக காணப்படும் என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் குறிப்பாக இளம் வயதில் 18 வயதிற்குள் திருமணம் செய்து, இளம் தாய்மார்களாக உருவாகிறார்கள். இளம் வயதில் கருவுற்றால் அவருக்கு பிறக்கு குழந்தைகளும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறக்கும் சூழ்நிலை உருவாகிறது. கருவுற்ற தாய்மாருகளுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இரத்த சோகை ஆகிய காரணங்களினால் ஏற்படும் பிரச்சனைகளால் பிறக்கும் குழந்தைகளின் உடல் எடை குறைந்து அந்த குழந்தை உயிர் வாழ வாய்ப்பு குறைவாக காணப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் கவனிப்பு மருத்துவமனைகள் (சீமான் சென்டர்- CEMON CENTER) என்ற மருத்துவமனை ஆறு இடங்களில் உள்ளது, அதாவது சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய இடங்களில் உள்ளது. இந்த மருத்துவமனையில் பாதுகாப்பான பிரசவம் மற்றும் தாய் சேய் நலம் உறுதிப்படுத்தப்படும்.

இப்பயிற்சியில் கலந்து கொண்ட அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி நமது மாவட்டத்தில் தாய் மற்றும் சிசு இறப்பு விகிதம் குறைப்பதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்கள். இப்பயிற்சியில் 850 அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பயிற்சி வழங்கிய மருத்துவ அலுவலர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பயிற்சி கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

Tags

Next Story