நாகர்கோவிலில் விபத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் உயிரிழப்பு

நாகர்கோவிலில் விபத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் உயிரிழப்பு
விபத்தில் உயிரிழந்த டேவிட் ஜோயல்
பைக் மீது ஆம்னி பஸ் மோதியது
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள கப்பியறை பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் டேவிட் ஜோயல் (24). பொறியியல் பட்டதாரியான இவர் தற்போது பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். நேற்று சொந்த வேலையாக நாகர்கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் இரவு பைக்கில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். இரணியல் அருகே தோட்டியோடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த ஆம்னி பஸ் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட டேவிட் ஜோயல் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஜோயல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story