காஞ்சிபுரம் அருகே பெற்றோர் கண்முன் மகன் வெட்டி கொலை

கொலை செய்யப்பட்டவர்
காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி அகரம் புதிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டராமன் மகன் சின்னா என்கிற உதயநிதி, 20; காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியில் பி.எஸ்சி., கணிதம் மூன்றாம் ஆண்டு மாணவர். இந்நிலையில், நேற்று, அதிகாலை 2:00 மணிக்கு, இவரது வீட்டிற்கு வந்த நான்கு பேர் கும்பல், கதவை தட்டியுள்ளது.
உதயநிதியின் தாய் சரிதா கதவை திறந்துள்ளார். வீட்டிற்கு வெளியே கத்தியுடன் காத்திருந்த கும்பல், சரிதாவிடம் கத்தியை காட்டி மிரட்டி, வீட்டிற்குள் புகுந்தது. அப்போது, தந்தை கோதண்டராமன், தாயார் சரிதா கண் முன்னே, துாங்கிக் கொண்டிருந்த உதயநிதியை சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியது. படுகாயமடைந்த உதியநிதி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார், உதயநிதியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உதயநிதியை கொலை செய்வதற்கு சற்று நேரம் முன், இதே கும்பல், படுநெல்லி கிராமத்தில் வசித்து வந்த உதயநிதியின் நண்பன் கிரி, 20, என்பவரை வெட்டியுள்ளது.
இச்சம்பவத்தின்போது, அருகில் பொதுமக்கள் கூடியதால், அங்கிருந்து தப்பியோடிய கும்பல், நேராக கோவிந்தவாடி அகரம் கிராமத்திற்கு வந்து, இரண்டாவது சம்பவமாக உதயநிதியை கொலை செய்துள்ளது, போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
