விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம்

மாவட்ட ஆட்சியர் 

விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் வரும் 15ஆம் தேதி அனைத்து வட்டாரங்களிலும் நடைபெறவுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் 15.02.2024 (வியாழக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அனைத்து வட்டாரங்களிலும் நடைபெறவுள்ளது.

அதன்படி, வத்திராயிருப்பு வட்டத்தில் கிருஷ்ணன்கோயில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திலும், விருதுநகர் வட்டத்தில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்திலும், வெம்பக்கோட்டை வட்டத்தில் செவல்பட்டி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியிலும், திருச்சுழி வட்டத்தில் ரெட்டியார்பட்டி வட்டார அலுவலகத்திலும்,

திருவில்லிபுத்தூர் வட்டத்தில் திருவில்லிபுத்தூர் ஸ்ரீ பாலகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், இராஜபாளையம் வட்டத்தில் ராம்கோ பொறியியல் கல்லூரியிலும், சாத்தூர் வட்டத்தில் சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், நரிக்குடி வட்டத்தில் ரெட்டியாபட்டி வட்டார அலுவலகத்திலும்,

காரியாபட்டி வட்டத்தில் சேது இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியிலும், அருப்புக்கோட்டை வட்டத்தில் ஸ்ரீ சௌடாம்பிகா பொறியியல் கல்லூரியிலும், சிவகாசி வட்டத்தில் எஸ்.எப்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெறவுள்ளது.

கல்வி கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் கல்வி கடன் விண்ணப்ப நகல், மாணவ/மாணவியர் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கி புத்தக நகல்,

இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட bonafide சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விவரம், பத்து பனிரெண்டாம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டபடிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல்பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட கல்லூரி சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முகாமில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து 15 தினங்களுக்குள் தகுதியான அனைவருக்கும் கடன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story