பெருமாள் கோவிலில் விசேஷ வழிபாடு

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பள்ளிபாளையம் பெருமாள் கோவிலில் விசேஷ வழிபாடு நடந்தது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் கட்டப்பட்டு பிரமாண்டமான முறையில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட நாட்டின் முக்கியமான தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள்,இந்துமத குருமார்கள் உள்ளிட்ட பலரும் அயோத்தியில் கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்றுள்ள நிலையில், நிகழ்வின் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அயோத்தி ஸ்ரீ இராமர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி, சிறப்பு வழிபாடு நிகழ்வுகளும் விசேஷ நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் அடுத்துள்ள வெடியரசம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கரிய வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் மகா கும்பாபிஷேக விழா சுதர்சன ஹோமம், பஜனை, விஜய் மகா மந்திரம், கூட்டு பிரார்த்தனை ஆகியவற்றுடன் நடைபெற்றது. இதில் விசேஷ நிகழ்வாக அயோத்தி கும்பாபிஷேக விழா நேரலையாக பக்தர்களுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் நிகழ்வை ஒட்டி ஸ்ரீ கரிய வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்வுகள் நடைபெற்று நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, தக்காளி சாதம், தயிர் சாதம், பொங்கல் உள்ளிட்ட அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Tags

Next Story