ஸ்ரீவில்லிபுத்தூர்: தேங்காய் விலை குறைவால் விவசாயிகள் கவலை

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்காய் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் உற்பத்தி செலவினங்களை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் , வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூமாபட்டி, கான்சாபுரம் , பட்டுப்பூச்சி, தம்பிபட்டி, நெடுங்குளம், மகாராஜபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நெல், தென்னை விவசாயம் என்பது பிரதானமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை விவசாயமே பிரதானமாக நடைபெற்று வருகிறது.

"பெத்த பிள்ளை கை விட்டாலும் வளர்த்த தென்னை வாழ வைக்கும் என்பது பழமொழி. தற்போது இந்த பழமொழியோ தலைகீழாக மாறிப் போய் உள்ளது . மகிழ்ச்சியாக தென்னை விவசாயம் செய்து வந்த விவசாயிகள் தற்போது தேங்காய் விலை குறைவால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். வத்திராயிருப்பு சுற்று வட்டார பகுதிகளில் விளையும் தேங்காய்கள் கர்நாடகா , ஆந்திரா ,மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.குறிப்பாக 2 மாதத்திற்கு ஒரு முறை தென்னை விவசாயிகள் தேங்காய்களை வெட்டி அதை விற்பனை செய்வர் .

கடந்த ஒரு சில வருடங்களாகவே தேங்காய் விலை என்பது மிகவும் வீழ்ச்சியடைந்து காணப்படுகிறது.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 6 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனையான தேங்காய் பின்பு 8 ரூபாயாக விலை உயர்ந்தது. இது ஓரளவிற்கு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 8 ரூபாய் விற்பனையான தேங்காய் 3 நாட்களில் விலை குறைந்து தற்போது 7 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனையாகிறது.இதனால் தென்னை விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து தென்னை விவசாயிகள் கூறும்பொழுது ,வத்திராயிருப்பு பகுதி என்பது செழிப்பான பகுதியாகும். பெத்த பிள்ளை கைவிட்டாலும் வளர்த்த நன்னை வாழ வைக்கும் என்ற பழமொழிக்கேற்ப தாங்கள் தென்னை விவசாயத்தை அதிக அளவு நம்பியுள்ளோம் .ஆனால் தொடர்ந்து தேங்காயின் விலை குறைந்து வருவதன் காரணமாக தென்னை விவசாயத்தை விட்டு விட வேண்டிய நிலை என்பது உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 10 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட தேங்காய் தற்போது தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது.தென்னை விவசாயம் செய்து வரும் தாங்கள் லாபம் என்பதே பார்க்க முடியாத நிலையில் உள்ளது. தேங்காய் வெட்டு கூலி , தென்னந்தோப்புகளை பராமரிப்பது உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் போக தற்போதுள்ள தேங்காய் விலை குறைவு காரணமாக தங்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.உடனே தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story