மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும்: கனிமொழி எம்.பி

மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும்: கனிமொழி எம்.பி

செய்தியாளர்களை சந்திக்கும் கனிமொழி எம்.பி,


தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வாக நட்புடணர்வோடு மீனவர்களை பாதுகாக்க கூடிய சூழல் ஏற்படுத்த வேண்டும் என்று கனிமொழி எம்பி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தூத்துக்குடி எம்பி கனிமொழி செய்தியாளர்களிடம் பேசும்போது, மாலத்தீவிற்கு புயல் வரும் அபாயம் இருந்ததால் ஒதுங்கி இருக்க கூடிய தூத்துக்குடியைச் சேர்ந்த 12 மீனவர்கள் மாலத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். இதற்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும் என்பதற்காக ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஒன்றிய அமைச்சரை தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்வேன். விரைவில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு தூத்துக்குடிக்கு வந்து சேரும் அளவில் ஒன்றிய அரசு உதவிகள் செய்து மீட்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, உதாரணமாக இலங்கையை எடுத்துக் கொண்டோமானால், இலங்கையில் இருக்கக்கூடிய மீனவ அமைப்புகளுடன் இங்கே இருக்கக்கூடிய மீனவ அமைப்புகள் பேசி ஒரு தீர்வை காண வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தப்பட்டது.

அந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறாத ஒரு சூழ்நிலை உள்ளது. இதை மறுபடியும் தொடங்கினாலே இலங்கைக்கும் நமக்கும் இருக்கக்கூடிய பிரச்சனைக்கு ஒரு தீர்வை காண முடியும். ஒவ்வொரு இடத்திலும் மீனவர்கள் கைது செய்யப்படுவதும், மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு அவர்கள் விடுதலை செய்யப்படுவது, அவர்களின் படகுகளைப் பிடித்துக் கொண்டு அதை திருப்பித் தராததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது இதற்கு நிரந்தர தீர்வாக நம்மை சுற்றி இருக்கக்கூடிய நாடுகளோடு பேசி ஒரு நட்புடணர்வோடு மீனவர்களை பாதுகாக்க கூடிய சூழல் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Tags

Next Story