கோடை மழை 47% குறைவு: வானிலை ஆய்வு மையம்

கோடை மழை 47% குறைவு: வானிலை ஆய்வு மையம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை மழை 47 சதவீதம் குறைந்துள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை மழை 47 சதவீதம் குறைந்துள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கோடை மழை 47 சதவீதம் குறைவாக பெய்து உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி எடுத்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் கோடை மழையும் தமிழகம் முழுவதும் பெய்யத் தொடங்கியது.

அதே போன்று தூத்துக்குடி மாவட்டத்திலும் ஒரு சில நாட்கள், சில இடங்களில் பலத்த மழை பெய்தது. பெரும்பாலும் மாவட்டம் முழுவதும் மிதமான சாரல் மழை பெய்தது. அதே நேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. வெயில் முகம் காட்டாத நிலையே நீடித்தது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (புதன்கிழமை) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து 24-ந் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.

அதன்பிறகு மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும். இதனால் இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதே போன்று குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகள், தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும் என்றும், அந்த பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடல் மீன்பிடித்தலில் ஈடுபட்டு உள்ள மீனவர்கள் நாளைக்குள் (வியாழக்கிழமை) கரைக்கு திரும்புமாறும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை முதல் லேசான வெயில் அடித்தது. மதியம் 1 மணிக்கு மேல் திடீரென பலத்த மழை பெய்தது. சுமார் 10 நிமிடம் பெய்த மழையால் சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. பின்னர் மிதமான வெயில் அடித்தது. மாலையில் மீண்டும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இதமான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அதே நேரத்தில் கோடை மழை தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பை விட குறைவாக பெய்து உள்ளது. கடந்த 1.3.24 முதல் 21.5.24 வரை சராசரியாக 102.8 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் 54.3 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்து உள்ளது. இதனால் இயல்பை விட 47 சதவீதம் மழை குறைவாக பெய்து உள்ளது.

கழுகுமலையில் கடந்த வாரம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அடுத்தடுத்து பெய்த கன மழையால் இப்பகுதியில் வெப்பம் குறைந்தது. தொடர்ந்து கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று காலை முதல் மதியம் 12 மணிவரை வெயில் அடித்தது. மாலை 4 மணியளவில் வெயிலின் தாக்கம் குறைந்து வானில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை நீடித்தது. மேலும், சுற்றுவட்டார கிராமங்களான குமாரபுரம், வெங்கடேஸ்வரபுரம், துரைச்சாமிபுரம், இராமநாதபுரம், வேலாயுதபுரம் உள்ளிட்ட 20-க்கும் ேமற்பட்ட கிராமங்களிலும் சாரல்மழை பெய்தது. இதனால் இப்பகுதியில் இதமான சூழல் உருவாகி உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story