அரசுப் பள்ளிக்கு வருகை தந்த சுவீடன் நாட்டு பள்ளி மாணவர்கள்

அரசுப் பள்ளிக்கு வருகை தந்த சுவீடன் நாட்டு பள்ளி மாணவர்கள்
X

மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு 

அரசுப் பள்ளிக்கு வருகை தந்த சுவீடன் நாட்டு பள்ளி மாணவர்களுக்கு தமிழக பாராம்பரிய முறையில் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சி சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் முறைகள், பள்ளி நடைமுறைகள், பாடத்திட்டம், தமிழர்களின் பண்பாடு, கலை கலாச்சாரம், வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள வந்த சுவீடன் நாட்டு பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கடைவீதியில் தமிழக பாராம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளித்து வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்க நெறிமுறைகள் பள்ளிகளில் ஆசிரியர்கள் நடத்தும் வகுப்புகள் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு எவ்வாறு பதில் அளிக்கின்றனர் என நேரில் பார்வையிட்டனர். முதலில் குத்து விளக்கேற்றி பள்ளியில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் குடிலில் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பள்ளியில் நடைபெறும் வழிபாட்டுக் கூட்டம், தமிழ் தாய் வாழ்த்து கொடியேற்றுதல், நாட்டு நடப்புகள், பொது அறிவு, ஆசிரியர்களின் அறிவுரைகள் தேசிய கீதம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நமது கலாச்சார கலை நிகழ்ச்சிகளான சிலம்பம் கரகம், நாட்டுப்புறப்பாட்டு , தற்காப்புக் கலை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து சுவீடன் நாட்டு பள்ளி மாணவர்கள் சுவீடன் நாட்டு தேசியக்கொடி பள்ளிக் கொடி மற்றும் நினைவு பரிசுகளை நமது அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கினர்.

Tags

Next Story