தென்மேற்கு பருவமழை குறித்த ஆய்வுக்கூட்டம்

தென்மேற்கு பருவமழை குறித்த ஆய்வுக்கூட்டம்

தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தென்மேற்கு பருவமழைக் காலமான ஜுன் முதல் செப்டம்பர் வரை தேனி மாவட்டத்தில் அனைத்து துறையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொண்டு, இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், பாதிப்புகளை குறைக்கவும், உடனடி நிவாரணம் வழங்கவும், மக்களை மீள குடியமர்த்தவும் மற்றும் மீள எழச்செய்ய தேவையான நடவடிக்கைகளை அனைத்துத் துறை அலுவலர்களும் பேரிடர் ஏற்படும் காலங்களில் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் பேரிடரின் போது பொது கட்டிடங்களை முகாம்களாக பயன்படுத்த ஏதுவாக மாவட்ட பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் போதுமானதாகவும் தகுதியானதாகவும் உள்ளதா என ஆய்வு செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மேலும் பொதுப்பணித்துறை கட்டிடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டிடங்களில் பழுதுகள் இருப்பின் அதனை உடனடியாக சரிசெய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நீர்நிலைப் புறம்போக்குகளான ஆறு, ஏரி, ஓடை, வாரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், மேற்படி நீர்நிலைகளின் கரைகளின் உறுதித் தன்மையினை ஆராய்ந்து, பலவீனமாக உள்ள கரைகளை பலப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவசர காலங்களில் கிராமங்களிலிருந்து பாதுகாப்பாக வெளியேறும் வழிகளுடன் கூடிய செயல் திட்டத்தினை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மூலமாக தயார் செய்து வைத்திருத்தல் வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட்ட அளவில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து, அப்பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புபணித் துறையினரின் செயல்முறை விளக்கம் நடத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நீர்நிலைகளில் பொதுமக்கள், சிறுவர் - சிறுமியர் இறங்குவதால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்க நீர்நிலைகளின் ஆழமான பகுதிகள் குறித்த விளம்பர பலகையினை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நீர்நிலைகளின் கரைகளில் வைக்க வேண்டும். வெள்ளத் தடுப்பு பணிக்காக போதுமான அளவில் மணல் மூட்டைகளை தேவைப்படும் இடங்களில் இருப்பு வைத்திட வேண்டும்.

பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்கவும், உதவிகள் தேவைப்பட்டால் தெரிவிக்கவும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தேனி மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை 04546-250101 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். TNSMART செயலியின் முக்கியத்துவம் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களும் தங்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். சுகாதாரத்துறையின் மூலம் தேவையான மருந்துப்பொருட்கள் இருப்பு உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் அவசர காலத்திற்கு பயன்படுத்தப்படக் கூடிய ICU/CCU –களில் பவர் பேக்அப் கிட், ஆக்ஸிஜன் சிலிண்டர், லைப் சேவிங் எக்யூப்மெண்டஸ், மருந்துகளை கொண்டு செல்ல தேவையான வாகனம் மற்றும் அவசர கால ஊர்தி தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ஆற்றில் உபரிநீர் அல்லது கொள்ளளவுக்கு அதிகமான நீரை அணையிலிருந்து வெளியேற்றப்பட நேரிடும் பொழுது, ஆற்றின் கரை பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்வதை உறுதி செய்திட வேண்டும். பிரதான சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய ஜேசிபி போன்ற கனரக வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அவசர காலங்களில் பயன்படுத்த மாற்று சாலை வசதியினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், விதைகள், உரங்கள் போதிய அளவில் இருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

Tags

Next Story